ஆந்திராவில் மலிவு விலையில் வெங்காயத்தை வாங்க வரிசையில் நின்ற நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் வெங்காய விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆந்திராவிலும் வெங்காய விலை கடும் உயர்வை கொண்டுள்ளதால் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை தனிநபர் ஒரு முறை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகளில் தலா 25 ரூபாய் விலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் அரசு மூலம் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் வெங்காயத்தை மலிவாக பெற்று செல்ல ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி பொதுமக்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கும் நீண்ட வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கினர்.
அப்போது கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகரிலுள்ள உழவர் சந்தையில் நேற்று மாலை வெங்காயம் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த சாம்பையா என்பவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவர் பரிதாபமாக மரணமடைந்தார். ஏற்கெனவே வரிசையில் நிற்கும் முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுவதும் அவர் மீது பொது மக்கள் ஏறி செல்வதுமான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியடைய செய்தது.